“இவரை பாருங்கள்! இறந்து போயும் நடந்து கொண்டிருக்கிறார்.”
அமித் மராண்டியை சமீபமாக பலர் கேலி பேசுகிறார்கள். இன்றும் பேசுகிறார்கள். அவரை பார்த்து சிரித்து கொண்டிருக்கும் ஆறு சக கிராமவாசிகள் அமர்ந்திருக்கும் மச்சான் (மூங்கில் பெஞ்ச் போன்ற அமைப்பு) நோக்கி அவர் செல்கிறார்.
சிரிப்பில் இணையும் 32 வயது சந்தால் பழங்குடியின் உணர்வு மாறுகிறது. முகத்தில் கோஅம் பூண்டு, “என்னை பாருங்கள், உயிருடன் இருக்கிறான். ஆனால் இறந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள்,” என்கிறார்.
பிகாரின் லோசிங்க்னா கிராமத்தை சேர்ந்த தினக்கூலியான அவர், இறந்து போன வாக்காளர்கள் பட்டியலில் தன் பெயர் இடம்பெற்றிருப்பது குறித்து சொல்கிறார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் இப்பட்டியல் தயார் செய்யப்பட்டது. வாக்காளர் பட்டியலில் தகுதியற்ற வாக்காளர்களை நீக்கவென மாநில தேர்தல் ஆணையத்தால் இந்த செயல்பாடு முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இங்கு, பல தகுதி பெற்ற பழங்குடி வாக்காளர்களின் பெயர்கள் ‘இறந்தவர்கள்’ பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. செல்பேசியில், உள்ளூர் நிருபர்களிடம், அமித் பெயர் பட்டியலில் இருக்கும் தகவலை நான் கூறினேன்.
இறந்தவர்கள் பட்டியலில் தன் பெயர் இடம்பெற்றிருப்பது குறித்து அவருக்கு கவலை இருக்கிறது: “நிச்சயமாக கவலை இருக்கிறது.”
நண்பகல் 12 மணி. பழங்குடி குக்கிராமமான லோவாவில், வாக்குச்சாவடி எண் 223ல் நீக்கப்பட்ட வாக்காளர்கள் பட்டியலுடன் நின்று கொண்டிருந்தேன். நீக்கப்பட்ட வாக்காளர்கள் குறித்த பட்டியல்கள் பற்றி தேர்தல் ஆணையத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இந்த குக்கிராமத்தை கண்டறிந்தேன். பல பழங்குடி மக்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கும் லொகிசிங்கா கிராமத்தின் 223ம் வாக்குச்சாவடியை இப்படித்தான் கண்டறிந்தேன்.
சந்தால் பழங்குடி குக்கிராமமான இதன் பெயர், மரத்தின் பெயரில் இருந்து பெற்ற பெயர். துமார் அல்லது குலார் (கொத்து அத்தி) மரத்தை சந்தாலி மொழியில் ‘லொவா’ எனக் குறிப்பிடுவார்கள். ஆஸ்த்ரோஆசிய மொழியான இதை, இந்தியாவில் 74 லட்சம் பேர் பேசுகிறார்கள்.
ஊருக்குள் ஒரு காலத்தில் பெரிய அத்தி மரம் இருந்ததால், மண் குடிசைகள் அதிகம் இருக்கும் சந்தாலிகளின் இந்த ஊர் அப்பெயர் பெற்றதாக உள்ளூர்வாசிகள் சொல்கின்றனர். சந்தாலி மக்களின் சராசரி மாத வருமானம் 6000-க்கும் குறைவாக இருப்பதாக 2022-2023 ஆண்டு பிகார் சாதிய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஐந்து சந்தால் பழங்குடிகளில் ஒருவர் சிறு விவசாயியாகவோ குத்தகை விவசாயியாகவோ இருக்கின்றனர். மீதமுள்ளவர்கள் அமித்தை போல தினக்கூலியாக இருக்கின்றனர். பாட்னாவில் ஓட்டுநராக இருக்கிறார் அவர்.





















